இந்தியா

சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை இரு மடங்காக அதிகரிக்க இலக்கு: மோடி

DIN

சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இரு மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு புதிய அலுவலக வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதையும், எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சியை இந்தியா அடையும் என்பதையும் பல்வேறு வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 2017-18 நிதியாண்டின் கடைசி காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. இதனை இரட்டை இலக்கமாக மாற்றும் நோக்கில் அரசு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.338 லட்சம் கோடி) பொருளாதாரமாக மாற உள்ளது. அதனை காண ஒட்டுமொத்த உலகமே ஆர்வமாக உள்ளது. எரிபொருள் உள்பட நமது நாட்டில் அதிகம் பயன்படுத்தும் பொருள்களுக்கு வெளிநாடுகளை அதிகம் சார்ந்து இருப்பதை நாம் தவிர்க்க வேண்டும். உள்நாட்டு வளங்களைக் கொண்டு நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இரு மடங்காக அதிகரிக்க அதாவது 3.4 சதவீதமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு 54 லட்சம் பேர் புதிதாக வரித் தாக்கலுக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு முன்பு 60 லட்சம் பேர் மட்டுமே மறைமுக வரி செலுத்தி வந்தனர். இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அன்னிய நேரடி முதலீடும் மேம்பட்டு வருகிறது என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT