ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரம் ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் ஆதாரங்களை அழித்துவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வாதிட்டது. ஆதாரங்களை அழித்ததற்கான ஆதாரம் இருந்தால் தான் தொடுத்த ஜாமீன் மனுவை திரும்பப் பெறுவதாக கார்த்தி சிதம்பரம் தரப்பு தெரிவித்தது.
இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் நிபந்தணை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
Advertisement
வழக்கு பின்னணி:
2007-இல் சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக செயல்பட்டு வந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாக சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.