முகப்பு
இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல்: யெச்சூரியை நிறுத்தினால் இடதுசாரிக்கு ஆதரவு: காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் சீதாராம் யெச்சூரியை வேட்பாளராக அறிவித்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்க

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் சீதாராம் யெச்சூரியை வேட்பாளராக அறிவித்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக அந்த மாநில காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் விரைவில் காலியாகவிருக்கும் 5 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு மார்ச் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதுள்ள எம்.பி.க்களில் 4 பேர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், எதிர்வரும் தேர்தலில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான எம்எல்ஏக்கள் பலம் மார்க்சிஸ்ட் கட்சியிடம் இல்லை.
இந்நிலையில், கொல்கத்தாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு பின், மாநில காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மாநிலத்தில் பாஜகவை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், காங்கிரஸும், இடதுசாரிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலில், ஒரு இடத்துக்கு சுயேச்சை வேட்பாளரை நிறுத்தி, அவரை இரு கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். அதேவேளையில், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியை வேட்பாளராக அறிவித்தால், அவரை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்றார் அதீர் சௌதரி.
இதனிடையே, காங்கிரஸின் இந்த விருப்பம் தொடர்பாக சட்டப் பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுஜான் சக்ரவர்த்தி கூறுகையில், 'சுயேச்சை வேட்பாளரை இரு கட்சிகளும் ஆதரிப்பது என்ற யோசனை நியாயமானதாக உள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை' என்றார்.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் 3 நாள் கூட்டம் கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்றது. அதில், காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 
அப்போது, எந்தவொரு அதிகார வர்க்க கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் சார்பில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. அதேவேளையில், காங்கிரஸுடன் கூட்டணி சேராமல், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று மற்றொரு மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தரப்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இரு தீர்மானங்கள் மீதும் வாக்கெடுப்பு நடைபெற்று, அதில் பிரகாஷ் காரத்தின் தீர்மானம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →