லக்னௌ: காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே கட்சியின் ஆட்சி மலரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மூன்று மாநில தேர்தல் வெற்றி குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்களில் பாரதிய ஜனதா காட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதுகுறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசும்பொழுது கூறியதாவது:
மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிரதமரின் கொள்கைகளே காரணம்.
நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் பாஜகவின் நிலையான செயல்பாடு மக்களின் வளர்ச்சிக்கான நோக்கங்களை நிறைவேற்றும் ஒரு நீண்ட வழியில் செல்லும்.
நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக வடகிழக்கு மாநிலங்கள் தேசிய மைய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பு பெற்றுள்ளன. இனி அவை முன்னேற்றத்திற்கான பலன்களையும் பெறும்.
பிரதமர் மோடியின் வளர்ச்சி சார்ந்த கொள்கைகள் மற்றும் தேசிய தலைவர் அமித் ஷாவின் வழிகாட்டுதல்களுடன் இனி கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தாமரை மலரும். இதற்காக அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
விரைவில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே கட்சியின் ஆட்சி வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.