மும்பை: கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கும் விவகாரத்தில் முறையான விதிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்று கூறி எஸ்.பி.ஐக்கு, ரிசர்வ் வங்கி ரூ.40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பது குறித்து ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை வகுத்து அளித்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இரு கிளைகளில் ரிசர்வ் வங்கி திடீரென ஆய்வு நடத்தியது. அப்போது கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பது தொடர்பான விதிகளை இரு வங்கிக்கிளைகளும் முறையாக பின்பற்றவில்லை என்பது தெரிய வந்தது.
எனவே வங்கி ஒழுங்குமுறைச்சட்டம் 1949, பிரிவு 47ஏ, பிரிவு 46ன் கீழ் விதிமுறையை மீறியது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. வங்கி நிர்வாகம் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லாத காரணத்தால் ரூ.40லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கடந்த 1-ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.