திருவனந்தபுரம்: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தினைத் தொடர்ந்து கேரளா வனப் பகுதிகளில் மலையேற்றத்திற்கு தாற்காலிகத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் பினரயி விஜயன் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் அருகே உள்ள குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி, மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர், ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கேரளா வனப் பகுதிகளில் மலையேற்றத்திற்கு தாற்காலிகத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் பினரயி விஜயன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேரள மாநில முதல்வர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கேரளா வனப் பகுதிகளில் மலையேற்றத்திற்கு தாற்காலிகத் தடை விதிக்கப்படுகிறது. இந்த முடிவை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எடுத்துள்ளது.
காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்கத் தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாநில வனத்துறைக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தேனி மாவதில் ஏற்பட்டுள்ள சம்பவம் மிகுந்த வருத்தத்தினை தருவதாகவும் முதல்வர் பினரயி விஜயன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.