இந்தியா

வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு! 

DIN

புதுதில்லி: வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை  நீட்டிப்பு செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு வரும் 31-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இந்நிலையில், அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதார் திட்டத்துக்கான அரசமைப்புச் சட்ட அங்கீகாரத்தை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, 'ஆதார் தொடர்பான மனுக்கள் மீது மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிவு எட்டப்படுவது சாத்தியமில்லை என்று கருதுகிறோம். எனவே, ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். கடைசி நேரத்தில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டால், வங்கிகள் உள்ளிட்ட நிதித் துறை நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே, அதனை கருத்தில் கொண்டு, உரிய காலத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.

முன்னதாக இந்த அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், 'ஆதார் தொடர்பான வழக்கு நீண்டகாலம் நடந்து வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களின் பயன்பெற ஆதாரை இணைக்க வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை கடந்த காலத்தில் ஏற்கெனவே சிலமுறை நீட்டித்துள்ளோம். எனவே, இப்போதுள்ள காலக்கெடுவான மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகும் காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது' என்றார்.

இந்நிலையில் வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை  நீட்டிப்பு செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கானது செவ்வாயன்று மீண்டும் அரசியல் சாசன அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கினை அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது; எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT