புதுதில்லி: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எல்லாம் திருப்பதி கோவில் உண்டியல் பணம் என்னும் பணிக்குச் செல்லலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 84- ஆவது வருடாந்திர மாநாடு தில்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசும் பொழுது கூறியதாவது:
வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்த 14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய சாதனை.
ஆனால் தற்பொழுது வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.இப்படி மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியது அவர்களுக்கு பாஜக அரசு செய்த பெரும் அநீதி.
பணமதிப்பு நீக்கதிற்குப் பிறகு வங்கிகளில் இருந்து வந்து சேர்ந்த பழைய ருபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை குறித்து ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து சரியான தகவல் இல்லை. எப்பொழுது கேட்டாலும் எண்ணிக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன் திருப்பதி கோவிலில் உண்டியலில் பணம் எண்ண செல்லக்கூடாது? அவர்களை விட திருப்பதி கோயில் ஊழியர்கள் வேகமாகப் பணம் எண்ணுகிறார்கள்.
இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.