முகப்பு
இந்தியா

முகநூல் நிறுவனத்தின் விளக்கத்தை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை: மத்திய அமைச்சர் ரவிசங்கர்

தகவல் திருட்டு விவகாரத்தில் முகநூல் மற்றும் 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' நிறுவனங்கள் அளிக்கும் விளக்கங்களைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

Updated On : 30 மார்ச், 2018 at 1:13 AM
பகிர்:

தகவல் திருட்டு விவகாரத்தில் முகநூல் மற்றும் 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' நிறுவனங்கள் அளிக்கும் விளக்கங்களைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை பிரிட்டனைச் சேர்ந்த 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' என்ற நிறுவனம் மேற்கொண்டது. அப்போது லட்சக்கணக்கான முகநூல் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் வாயிலாக அவர்களது விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு அதை டிரம்ப்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாக அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, சம்பந்தப்பட்ட நபர்கள் வலைதளத்தைப் பயன்படுத்தும்போது, தனிப்பட்ட முறையில் டிரம்ப்புக்கு ஆதரவாக பிரசார விளம்பரங்களை பதிவேற்றி அவர்களைக் கவர்ந்ததாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் முகநூல் நிறுவனத்துக்கும், 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' நிறுவனத்துக்கும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்தியாவில் தேர்தல் நடைபெற்றபோது இங்குள்ள முகநூல் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் தவறாகக் கையாளப்பட்டனவா? என்று 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோன்று, முகநூல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், பயன்பாட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைளில் அந்நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது? தகவல் திருட்டு விவகாரங்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை? என்பன குறித்த விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளிக்கும் விளக்கங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பிரிட்டன் நாடாளுமன்றக் குழு 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' விவகாரத்தை விசாரித்து வருவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதுகுறித்து தற்போது எந்தக் கருத்தும் கூற இயலாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.