ராம நவமி வன்முறை: பதற்றமான பகுதிகளுக்குச் செல்ல மத்திய அமைச்சருக்குத் தடை
மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தின்போது மூண்ட வன்முறைக்குப் பிறகு, பதற்றம் நிலவும் இடங்களுக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சர்
மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தின்போது மூண்ட வன்முறைக்குப் பிறகு, பதற்றம் நிலவும் இடங்களுக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை போலீஸார் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர். அமைச்சருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலம், ராணிகஞ்ச், வர்த்மான் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறை மூண்டது. இதில், ஒருவர் கொல்லப்பட்டார். 2 போலீஸார் காயமடைந்தனர். அதையடுத்து, பதற்றமான பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராணிகஞ்ச் பகுதியில் புதன்கிழமை இரவில் இருந்து எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை; நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்நிலையில், மத்திய கனரகத் தொழில் துறை இணையமைச்சரும், அசான்சோல் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ, வர்த்மான் மாவட்டத்தில் தனது தொகுதிக்கு உள்பட்ட ரயில்பூர் பகுதிக்கு வியாழக்கிழமை செல்ல முயன்றார். அப்போது, பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, அவரது காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கு திரண்டிருந்த மக்கள், அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில், பிரச்னையில் தவிக்கும் எனது தொகுதி மக்களைச் சந்திப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஆனால், 144 தடையுத்தரவை காரணம் காட்டி, எனக்கு போலீஸார் அனுமதி மறுக்கிறார்கள்.
இந்த விஷயத்தை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். மாநில போலீஸார் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. மத்தியப் பாதுகாப்புப் படைகளை ஈடுபடுத்தினால் மட்டுமே, பதற்றமான பகுதிகளில் அமைதி திரும்பும். இந்த நிலையில், எனக்கு எதிராக போலீஸார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். போலீஸாருக்கு எதிராகப் புகார் கொடுத்திருக்கிறேன் என்றார் அவர். எனினும், பாபுல் சுப்ரியோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என போலீஸார் உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
பாஜக மாநில மகளிர் அணித் தலைவர் லாக்கெட் சாட்டர்ஜியும், ராணிகஞ்ச் நகருக்குப் புறப்பட்டுச் சென்றபோது துர்காபூரில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதுகுறித்து சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், 'ராணிகஞ்ச் நகருக்கு அமைச்சர் ஏன் செல்ல வேண்டும்? ஏற்கெனவே அந்தப் பகுதியில் வன்முறையைக் கட்டவிழ்த்தது போதவில்லையா?' என்று கேள்வி எழுப்பினார்.