ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடி: ரூ.2,300 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
மேற்கு வங்க மாநிலத்தில் ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, ரூ.2,300 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை வியாழக்கிழமை முடக்கியது.
மேற்கு வங்க மாநிலத்தில் ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, ரூ.2,300 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை வியாழக்கிழமை முடக்கியது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 9 ஹோட்டல்கள், 11 ரிசார்ட் விடுதிகள், 200 ஏக்கர் மனை, 414 இடங்களில் நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகள் கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. ஒரேயொரு உத்தரவின் மூலம், அதிகப்படியான சொத்துகளை முடக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
மேற்கு வங்க மாநிலத்தில் 28 இடங்களில் நிதி நிறுவனங்களைத் தொடங்கிய ரோஸ்வேலி குழுமம், முதலீட்டாளர்களுக்கு அதிக தொகையைத் திருப்பித் தருவதாக உறுதியளித்து, பெருமளவில் நிதியைத் திரட்டியது. ஆனால், வாக்குறுதியளித்தபடி அவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தரவில்லை.
இதுதொடர்பாக, இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து ரோஸ்வேலி நிறுவனத்துக்கு எதிராகவும், அந்த நிறுவனத்தின் தலைவர் கெளதம் காண்டு உள்ளிட்டோருக்கு எதிராகவும் கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இதேபோல், சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. அதையடுத்து, கெளதம் காண்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடி தொடர்பாக, கொல்கத்தா, புவனேசுவரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில் பல குற்றப்பத்திரிகைகளை அமாலக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 2,300 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை வியாழக்கிழமை முடக்கியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக, இதுவரை ரூ.4,200 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.