உதவித்தொகை பெறுவதில் முறைகேடு: கல்வி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வரும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வரும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பத்தாம் வகுப்புக்குப் பிறகு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், தங்களது கல்வியைத் தொடர்வதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைப் பயன்படுத்தி சில கல்வி நிறுவனங்கள் முறைகேடு செய்வதாகப் புகார்கள் வந்துள்ளன. அவற்றைத் தடுப்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த துறைக்கான அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சில கல்வி நிறுவனங்கள், போலியாக மாணவர் சேர்க்கை நடத்தி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற்று, அதிக அளவு பணத்தை ஊழல் செய்வதாகப் புகார்கள் வந்துள்ளன.
சில கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை அரசிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிறகு, அவர்களுக்கு நல்ல முறையில் கற்பிப்பதில்லை என்றும் புகார்கள் வந்துள்ளன. இதனால், இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தோல்வியடையும் நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக, பல்வேறு பதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
அதன்படி, இதுவரை கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வந்த உதவித்தொகை, இனி, மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதனால், மாணவர்களால் உரிய நேரத்தில் தாமதமின்றி கல்விக் கட்டணத்தை செலுத்த முடியும்.
மேலும், கல்வி உதவித்தொகை மாணவர்களில் குறைந்தது 50 சதவீதம் பேரையாவது கல்வி நிறுவனங்கள் தேர்ச்சி பெறச் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால், அந்த கல்வி நிறுவனங்களின் தரத்தை குறைக்கும் விதமாக, அவற்றின் பெயர்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.