கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: வீரப்ப மொய்லி
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தொங்கு சட்டப் பேரவைதான் அமையும் என வெளியான வாக்குக் கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடந்தது. 2 தொகுதிகளைத் தவிர ஏனைய இடங்களில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நிலவும் நேரடிப் போட்டி என்பதால் தேசிய அளவில் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றது.
மேலும், எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இது பார்க்கப்படுவதால் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் மேலோங்கியுள்ளது. இந்தச் சூழலில், பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட வாக்குக் கணிப்பில் கர்நாடகத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்று ஒரு தரப்பும், பாஜகவே வெல்லும் என்று மற்றொரு தரப்பும் கணிப்பு வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், தேவெ கெளடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் துணையுடன்தான் எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியும் என்று அனைத்து செய்தி நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இதுதொடர்பாக வீரப்ப மொய்லி பிடிஐ செய்தியாளருக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. குறைந்தது பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களையாவது கைப்பற்றும் என நான் நினைக்கிறேன்.
சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு மேற்கொண்ட செயல்பாடுகளுக்காக மக்கள் வாக்களித்திருப்பார்களேயானால், மீண்டும் காங்கிரஸ் அமைவது உறுதி.
ஒருவேளை சில கருத்துக் கணிப்புகளில் தெரிவிப்பது போல பாஜக வெற்றி பெற்றால், ஆண்டவன்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றார் அவர்.