முகப்பு
இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: பெண் உள்பட 6 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், பெண் உள்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 22 மே, 2018 at 12:45 AM
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கி குண்டுகளை வீசி திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியதை அடுத்து, தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், பெண் உள்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்னியா செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர். அவர்களின் தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். 
அதைத் தொடர்ந்து ஆர்னியா காவல் நிலையம், சந்தைப் பகுதி ஆகிய இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் பீரங்கி குண்டுகளை வீசினர். 
இதனால், பீதியடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளயேறி, வேறு இடங்களுக்குச் சென்றனர். அவர்களின் தாக்குலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். 
எனினும், இந்த மோதலில், ஆர்னியாவைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு காவல் துறை சிறப்பு அதிகாரி உள்பட 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பாகிஸ்தான் படையினரின் தாக்குதல் காரணமாக, ஆர்னியாவில் சர்வதேச எல்லையில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.
போலீஸ் நிலைகள் மீது தாக்குதல்: இதனிடையே, புல்வாமா மாவட்டத்தில் போலீஸ் நிலைகள் மீது தீவிரவாதிகள் திங்கள்கிழமை காலை தாக்குதல் நடத்தினர். போலீஸார் உரிய பதிலடி கொடுத்ததால், அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். 
போலீஸாரிடம் உள்ள ஆயுதங்களைப் பறிக்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரில் கட்டுப்பாடு: இதனிடையே, மறைந்த பிரிவினைவாதத் தலைவர்கள் மீர்வாய்ஸ் முகமது ஃபாரூக், அப்துல் கனி லோன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, திங்கள்கிழமை பொதுக் கூட்டம் நடத்துவதற்கு பிரிவினைவாத அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். 
இதன் காரணமாக, சஃபாகடல், ரைனவாரி, நெüஹட்டா, எம்.ஆர்.குங், கன்யார் ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.