நீதிபதி லோயா வழக்கில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு
நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை தேவையில்லை என்று அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை தேவையில்லை என்று அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்ட சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து வந்த லோயா திடீரென மரணமடைந்தது அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகி தெஹ்சீன் புனாவாலா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பி.எஸ். லோனே ஆகியோர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதி லோயா இயற்கையாகவே மரணமடைந்தார் என்று உறுதி செய்தது.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மும்பை வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் மறு ஆய்வு மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் ஒரு தரப்பின் வாதங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் அதில் உரிய நீதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.