கிழக்கு நாடுகளின் கொள்கை அடிப்படையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தை செவ்வாய்கிழமை மேற்கொண்டார்.
ஆசியான் எனப்படும் கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பில் இடம்பிடித்துள்ள இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் மலேஷியா ஆகிய 3 நாடுகளுக்கும் 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் தற்போது முதன்முறையாக இந்தோனேஷியா செல்கிறார். அதுபோல 3-ஆவது முறையாக சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார்.
முதலாவதாக இந்தோனேஷியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடூடூ உடன் ஜகர்தாவில் சந்தித்து இருநாடுகளின் உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் இந்திய வம்சாவளி தலைமை செயலரை சந்திக்கிறார். இதையடுத்து ஜகர்தாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பின்னர் மலேஷியா சென்று அந்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மஹாதிர் மொஹம்மதுடன் கோலாலம்பூரில் சந்திக்கிறார். இதையடுத்து சிங்கப்பூர் சென்று இருநாடுகளின் உறவு, பொருளாதார தொழில்நுட்பம், திறன் வளர்ச்சி, தானியங்கி தொழில்நுட்ப மேம்பாடு, ஊரக வளர்ச்சி ஆகியவை குறித்து ஆலோசிக்கவுள்ளார்.