இந்தியாவால் ரூ.2989 கோடி செலவிட்டு ஒரு சிலையை வைக்க முடியும் என்றால், பிறகு ஏன் பிரிட்டன் இந்தியாவுக்கு நிதியுதவி செய்ய வேண்டும், உடனடியாக அதை நிறுத்திவிடலாம் என்று கருத்துக் கூறியுள்ளார் பிரிட்டன் எம்பி பீட்டர் போனி.
உலகிலேயே மிகப் பெரிய சிலை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் சர்தார் வல்லபபாய் படேல் சிலையை கடந்த வாரம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த சிலை குறித்து இரண்டு விதமான விமரிசனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானது எதிர்மறை விமரிசனங்களே.
இந்தியாவில் மட்டுமல்ல, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் போனி இது குறித்து கூறியிருப்பது என்னவென்றால், கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனிடம் இருந்து ரூ.9,492 கோடி அளவுக்கு நிதியுதவி பெற்ற இந்தியா, அதே நேரத்தில் மறுபக்கம் சர்தார் படேல் சிலை அமைக்க ரூ.2,989 கோடியை செலவிட்டுள்ளது. நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை பாதுகாத்தல், மறு ஆக்கம் செய்யத்தக்க எரிபொருளை உருவாக்குதல் போன்றவற்றை மேம்படுத்தவே இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால் 2000 டன் எடையுள்ள சிலையை அமைக்க இந்தியாவால் ரூ.3000 கோடியை செலவிட முடியும் என்றால், இந்த மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வெளிநாட்டு நிதயுதவி தேவைப்படாது.
நிதியுதவியை எப்படி செலவிடுகிறார்கள் என்பது அவர்கள் இஷ்டம்தான் என்றாலும், சிலை அமைக்க பணம் செலவிட முடியும் அரசால், வெளிநாடுகளில் இருந்து உதவி பெறாமலும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.