தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மக்களை தவறாக வழிநடத்துகிறது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (திங்கள்கிழமை) குற்றம்சாட்டினார்.
ஜகதாத்ரி பூஜா தொடக்க நிகழ்வில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "தேர்தல் வரும்போது மட்டும்தான் பாஜக மதத்தை பற்றி பேசும். தீபாவளியை பாஜக தொடங்கிவைத்ததா அல்லது பல வருடங்களாக நாம் அதை கொண்டாடி வருகிறோமா? தீபாவளியை கொண்டாடுபவர்கள் சொல்லுங்கள். இந்த பண்டிகைகள் பல ஆயிரம் வருடங்கள் பழமையானது. மதத்தின் பெயரில் பாஜக மக்களை தவறாக வழிநடத்துகிறது.
நாமும் இந்து பண்டிகைகளை கொண்டாடுகிறோம். அதை கொண்டாடவேண்டும் என்பதை நாம் பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை. பாஜக மக்களை பிரிக்க முயல்கிறது. தேர்தல் வரும் போது ஹிந்தி பேசும் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்று கேட்பார்கள். ஆனால், அவர்களுக்காக பாஜக என்ன செய்துள்ளது?
உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மக்களை குஜராத்தில் இருந்து ஏன் வெளியே அனுப்புனீர்கள் என்று பாஜகவிடம் கேட்கிறேன். இதே வேகத்தில் சென்றால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் அல்லது தில்லியில் வசிக்கும் பிறமாநில மக்களையும் ஒருநாள் வெளியேற்றிவிடுவார்கள்" என்றார்.
மத்திய கொல்கத்தா பகுதியில் ஹிந்து மொழி பேசும் மக்கள் எண்ணிக்கை அதிகம். அதனால், பாஜக என்ன செய்துள்ளது என்று மம்தா பானர்ஜி அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.