தண்டவாளத்தில் படுத்து நூலிழையில் உயிர் பிழைத்த ஆந்திர நபர்
ஆந்திர மாநிலத்தில் ரயில் தன் மீது மோதாமல் தவிர்க்க தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த சம்பவம் விடியோவில் பதிவாகியுள்ளது.
அனந்தபுர்: ஆந்திர மாநிலத்தில் ரயில் தன் மீது மோதாமல் தவிர்க்க தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த சம்பவம் விடியோவில் பதிவாகியுள்ளது.
அனந்த்புர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய ஒரு பயணி, தண்டவாளத்தில் ரயில் வருவதைப் பார்க்காமல், அதில் குதித்துக் கடந்து செல்ல முயன்றார். அவரைத் தடுக்க அருகில் இருந்த பயணிகள் கூக்குரல் எழுப்பியும் அதை அவர் காதில் வாங்காததால் இந்த சம்பவம் நேரிட்டது.
ஆனால், ரயில் மிக அருகில் வந்ததைப் பார்த்த அந்த நபர், சாதுர்யமாக காலை நீட்டி தண்டவாளத்தில் படுத்தே விட்டார். அவர் மீது சரக்கு ரயில் வேகமாக கடந்து சென்றது. ரயில் முழுவதுமாக தன்னைக் கடந்து சென்ற பிறகு தூங்கி எழுந்தது போல கை கால்களை அசைத்தபடி எழுந்து நின்றார்.
Advertisement
இதனை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் அவர் எழுந்து நின்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தனது செல்போனில் விடியோ எடுத்ததால் அது சமூக தளங்களில் பரவி வருகிறது.