சபரிமலையில் பெண்கள் வழிபட 2 நாட்கள் ஒதுக்குவது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும்: பினராயி விஜயன்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்காக இரண்டு நாட்களை பிரத்யேகமாக ஒதுக்கும் விவகாரம் குறித்து நீதிமன்றமே முடிவெடுக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுளளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்காக இரண்டு நாட்களை பிரத்யேகமாக ஒதுக்கும் விவகாரம் குறித்து நீதிமன்றமே முடிவெடுக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுளளார்.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாள்களை ஒதுக்க தயாராக இருப்பதாக கேரள உயர்நீதிமன்றத்தில் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் ஹிந்து அமைப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, சபரிமலை நடை திறக்கப்பட்ட நாள்களில், சில இளம் பெண்கள் அங்கு செல்ல முயன்றனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி, 4 இளம்பெண்கள் சார்பில் அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஒரு இளம்பெண் கூட அக்கோயிலில் அனுமதிக்கப்படவில்லை. எனவே, பெண்கள் தரிசனம் செய்வதற்காக மட்டும் வாரத்தில் 3 நாள்கள் ஒதுக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. மேலும், சபரிமலை செல்லவிரும்பும் பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, அரசுத் தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், பெண்கள் வழிபடுவதற்காக, வாரத்தில் 2 நாள்களை ஒதுக்க மாநில அரசு தயாராக உள்ளது என்றார். பின்னர், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.