புது தில்லி: கடன் தள்ளுபடி உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளுக்காக தில்லிக்குள் பேரணியாக நுழைய முயன்ற சுமார் 70 ஆயிரம் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தில்லி - உத்தரப்பிரதேச எல்லைக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் தடுப்புகளை அமைத்திருக்கும் காவல்துறையினர், விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியுள்ளனர். டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் வந்த விவசாயிகள் கலைந்து செல்லாததால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டியில் இருந்து டிராக்டர்களுக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லிக்கு பேரணியாக வந்த விவசாயிகள், எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக எல்லையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
காந்தி ஜெயந்தி நாளில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லிக்குள் நுழைவதற்காக காசியாபாத் பகுதியில் பேரணியாக வந்த விவசாயிகளை, காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். விவசாயிகள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் அவர்களை கலைந்து போகச் செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.