திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் மலைப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் சின்னாபின்னமாகிப் போனது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கனமழையால் உண்டான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா தற்போதுதான் இயல்பு நிலைகுத்த திரும்பி வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மலைப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் கேரளாவில் திருச்சூர், பாலக்காடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மழை அபாயத்தின் காரணமாக ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் சில மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:
கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம்.
கன மழை காரணமாக உண்டாகும் எல்லா விதமான நெருக்கடிகயும் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
6,7,8 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் 5-ம் தேதி தேதிக்குள் கரைக்கு திரும்பி விட வேண்டாம்.
மீட்பு பணிகளை விரிவாக மேற்கொள்ள உதவி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.