சபரிமலை தீர்ப்பு குறித்து கேரள முதல்வருடனான சமாதான கூட்டத்தில் சபரிமலை தந்திரி சார்பாக பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசும், தேவசம் போர்டும் அறிவித்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் ஏராளமான பெண்கள் உட்பட பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் பத்மகுமார் கூறுகையில், முதலில் தேவசம் போர்டு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய விரும்பியது, ஆனால் கேரள அரசு நிராகரித்த பிறகு அந்த முடிவை கைவிட்டது என்றார்.
இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த கேரள முதல்வர் திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று சபரிமலை தலைமை தந்திரி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
"உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக அரசு இறுதி முடிவை தெரிவிக்கட்டும். அதன்பிறகு, எதை செய்யவேண்டும் என்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம். மகளிர் போலீஸாரை கோயிலுக்குள் அனுமதிப்பது என்பது கோயிலின் நடைமுறைக்கு எதிரானது" என்றார்.
இந்த முடிவு வலிமைமிக்க ஹிந்து நாயர் சமுதாயத்திடம் நீண்ட ஆலோசனை நடத்திய பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.