புது தில்லி ; கோவா மாநில சட்டப்பேரவையில் இருந்து ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்
கோவாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில், 14 பாஜக உறுப்பினர்கள் உட்பட 23 பேரின் ஆதரவுடன் அந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரசுக்கு 16 உறுப்பினர்கள் உள்ளார்.
வடக்கு கோவாவின் மன்றேம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான தயாநந்த் சோப்டே (54) மற்றும் தெற்கு கோவாவின் ஷிரோடா தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவரான சுபாஷ் ஷிரோத்கர் (66) ஆகிய இருவரும்தான் தற்போது தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
இவர்கள் தங்களது ராஜிநாமா கடிதத்தினை சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த்துக்கு பேக்ஸில் அனுப்பி வைத்துள்ளனர். அவர்களது ராஜிநாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரும் உறுதி செய்துள்ளார்.
ராஜிநாமா கடிதம் அனுப்பியுள்ள இருவரும் திங்கள் இரவே தில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதால், அவர்கள் பாஜகவில் சேர உள்ளதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் காங்கிரசில் இருந்து விலகும் அறிவிப்பு வெளிவரும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் மத்திய ரயில்வே துறை மைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்
தில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற எளிய விழாவில் அவர்களது இணைப்பு வைபவம் நடைபெற்றது.
இவர்களது ராஜிநாமாவின் காரணமாக கோவா சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 14 ஆக குறைந்துள்ளது.
கோவா மாநில முதல்வரான மனோகர் பாரிக்கர் தற்போதுஉடல்நலக் குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.