சத்தீஸ்கரில் ராகுல் இன்று தேர்தல் பிரசாரம்
சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தொடங்கவுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தொடங்கவுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் சுஷில் ஆனந்த் சுக்லா, செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை மதியம் 2.10 மணிக்கு வரும் ராகுல் காந்தி, 3 மணியளவில் இங்குள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனும், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார் என்றார் அவர்.
சத்தீஸ்கரில் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 12, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 6-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன.
அதன் பிறகு சத்தீஸ்கருக்கு முதல் முறையாக ராகுல் காந்தி திங்கள்கிழமை வருகிறார்.
மாநிலத்தில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுட்டுள்ளதால், விவசாயிகள் கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி தனது பிரசாரத்தை தொடங்குவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.