தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்: ம.பி.யில் மாவட்ட ஆட்சியர் மாற்றம்
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிந்த் மாவட்ட ஆட்சியர் மீது தேர்தல்
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிந்த் மாவட்ட ஆட்சியர் மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு ஆட்சியர் அனுமதித்ததாகவும் பிந்த் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மீது தேர்தல் ஆணையத்திடம் அந்த மாவட்டத்தின் லஹார் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோவிந்த் சிங் புகார் தெரிவித்தார். மாநில அரசிடமும் இதுகுறித்து அவர் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக கோவிந்த் சிங் கூறுகையில், மாநில தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர் ஆகியோரைச் சந்தித்து, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரை பதவி நீக்கம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று கூறினார்.
அதையடுத்து மாநில தலைமை செயலகத்தின் துணைச் செயலராக ஆஷிஷ் குமாரை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பிந்த் மாவட்ட ஆட்சியராக தன்ராஜ் எஸ். ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலின் போது, வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் குளறுபடி விவகாரத்தில் அப்போதைய பிந்த் மாவட்ட ஆட்சியராக இருந்த டி. இளையராஜா பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.