பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டம்: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் குண்டு வெடித்ததில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்ததை கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் குண்டு வெடித்ததில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்ததை கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக காஷ்மீரில் திங்கள்கிழமை இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு சம்பவ இடத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர் வெளியேறினர். அங்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருக்கலாம் என்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், அதனை மீறி அங்கு பலர் சென்றனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இதனால் ஸ்ரீநகரில் கடைகள், தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமே மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டன.
பிரிவினைவாத தலைவர்களான சையது அலி ஷா குரேஷி, மிர்வாய்ஸ் உமர் பாரூக், முகமது யாசின் மாலிக் ஆகியோர் இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு, காஷ்மீர் தொழில், வர்த்தக சம்மேளனம், காஷ்மீர் பண்டிட் சங்கராஸ் சமிதி, அனைத்து காஷ்மீர் ஆட்டோ - ரிக்ஷா ஓட்டுநர் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன. திங்கள்கிழமை நடத்தப்பட இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநில பள்ளிக் கல்வி வாரியத் தேர்வுகள், இஸ்லாமிய அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிலைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.