மீ டூ குற்றச்சாட்டு: பொதுநல வழக்கை அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மீ டூ ஹேஷ்டேக் மூலம் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை வழக்குப்பதிவு செய்ய வேண்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
மீ டூ ஹேஷ்டேக் மூலம் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை வழக்குப்பதிவு செய்ய வேண்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்தியாவில் மீ டூ ஹேஷ்டேக் மூலம் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் ஏற்படுத்திய நபர்கள் மீது பெண்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த மூவ்மென்ட் உலகளவில் ஏற்கனவே பிரபலமாகியிருந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக பிரபலமாக பரவப்பட்டு வருகிறது.
இதில் சினிமா, ஊடகம் என பல துறையில் உள்ள பல முக்கியப் பிரபலங்களின் பெயர் வெளிவந்தது. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி விசாரணைக் குழு அமைக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Advertisement
இந்நிலையில், இந்த மீ டூ ஹேஷ்டேக் மூலம் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின்படி, மீ டூ ஹேஷ்டேக் மூலம் வெளிவரும் விவகாரங்களை அதன் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் மூலம் வெளிவரும் பெண்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் போதிய பாதுகாப்பும், உதவியும் வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்து.
இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி எஸ் கே கௌல் அடங்கிய அமர்வு மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் எம் எல் சர்மாவிடம் தெரிவித்தனர்.
முன்னதாக, அவசர வழக்குகள் விசாரணையில் புதிய வரையறைகள் வகுக்கப்படும் வரை தூக்குத் தண்டனை, ஆக்கிரமிப்பு அகற்றம் அல்லாத பிற எந்த விவகாரங்கள் குறித்தும் அவசர வழக்குகளாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.