நாகேஸ்வர ராவ் கொள்கை முடிவெடுக்கத் தடை; 2 வாரத்துக்குள் விசாரணை: உச்ச நீதிமன்றம்
தன்னை கட்டாய விடுப்பில் செல்லுமாறு, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, சிபிஐ, சிவிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: தன்னை கட்டாய விடுப்பில் செல்லுமாறு, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, சிபிஐ, சிவிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ், பெரிய அளவில் கொள்கை முடிவு எதையும் எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐயின் தற்காலிக இயக்குநராக பொறுப்பேற்ற அக்டோபர் 23ம் தேதி முதல் இந்த நாள் வரை எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் எதையும் நாகேஸ்வர ராவ் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், தான் எடுக்கும் கொள்கை முடிவுகள் தொடர்பான விவரங்களை மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களின் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் மீது மத்திய விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணையை 2 வார காலத்துக்குள் நடத்தி முடித்து, அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் விசாரணையை நேரில் ஆய்வு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிபிஐ அதிகாரிகள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று கோரி லாபநோக்கற்ற அமைப்பு ஒன்று தாக்கல் செய்த பொது நலன் மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து சிபிஐ, மத்திய அரசு, மத்திய புலனாய்வுக் குழு உள்ளிட்டவை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சிபிஐ அதிகாரிகள் மீதான விசாரணையை 10 நாட்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், 10 நாட்கள் போதாது என்று மத்திய விசாரணை ஆணையம் கூறியது. இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இரண்டு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக, சிபிஐ இயக்குநர் அலோக் குமார், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்ட மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக எம்.நாகேஸ்வர ராவை நியமித்தது. மேற்கண்ட இரு அதிகாரிகள் இடையிலான மோதல்போக்கு, அஸ்தானா மீதான லஞ்ச வழக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடந்த செவ்வாய்-புதன் இடையிலான ஒரே இரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிராக அலோக் குமார் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில், முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிஐ அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து, ஒரே இரவில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டது சட்டவிரோதம்; இதுபோன்ற தலையீடுகள், சிபிஐ-யின் சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் சீர்குலைத்துவிடும் என்று மனுவில் அலோக் குமார் வர்மா கூறியிருந்தார்.
இந்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சய் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தி, மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.