கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களுக்கு ரூ.50 லட்சம்: பிசிஐ முடிவு
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களுக்கு நிவாரணமாக மொத்தம் ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தெரிவித்துள்ளது.
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களுக்கு நிவாரணமாக மொத்தம் ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தெரிவித்துள்ளது.
இது குறித்து பிசிஐ முன்னாள் நிர்வாகத் தலைவரும், உறுப்பினருமான டி.எஸ். அஜித் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
கேரள வெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து நிவாரணப் பொருள்களும், நிதியும் அளித்து வருகின்றனர். கேரள வெள்ளத்தில் வழக்குரைஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது அலுவலகங்களில் வெள்ளநீர் புகுந்து சட்டப் புத்தகங்கள் உள்ளிட்டவை அழிந்துள்ளன. எனவே, கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களுக்கு நிவாரணமாக மொத்தம் ரூ. 50 லட்சம் வழங்க பிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் உரிய ஆவணங்களை அளித்து பெற வழிவகை செய்யப்படும் என்றார் அவர். கேரள வெள்ள நிவாரணத்துக்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அண்மையில் ரூ. 39 லட்சம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.