வங்கிக் கடன் மோசடியில் சிக்கியுள்ள வைர வியாபாரிகள் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதில் தங்களது அதிகாரிகளுக்கு தொடர்பில்லை என்று சிபிஐ விளக்கமளித்துள்ளது.
மல்லையாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட "லுக் அவுட்' நோட்டீûஸ, சிபிஐ அமைப்பில் இருக்கும் குஜராத் மாநில அதிகாரி ஏ.கே. ஷர்மா திருத்தினார் என்றும், மல்லையா தப்பியோட அவர்தான் அனுமதித்தார் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.
வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர் தப்பியோடியதற்கும் ஷர்மா தான் காரணம் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், சிபிஐ இவ்வாறு விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
மல்லையா விவகாரத்தைப் பொருத்த வரையில், அவரைக் கைது செய்வதற்கு போதிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லாததன் காரணமாகவே அவருக்கு எதிராக வெளியிடப்பட்ட "லுக் அவுட்' நோட்டீஸில் கைது நடவடிக்கையை குறிப்பிடவில்லை.
அதேபோல், நீரவ் மோடி விவகாரத்தில் அவரும், அவரது உறவினர் மெஹுல் சோக்ஸியும் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற ஒரு மாதத்துக்குப் பிறகே பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐயிடம் புகார் அளித்தது.
எனவே, அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்ற விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.