ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பேர் பயணிகளுடன் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வியாழக்கிழமை காலை புறப்பட்டது. அப்போது சில நிமிடங்களில் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
30-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தலைவலி ஏற்பட்டதோடு மூக்கு மற்றும் காது வழியாக ரத்தமும் கசிந்தது. இதனால் விமானம் பாதியில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணிகள் அனைவரும் உடனடியாக மும்பை விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் இயக்கியதே இத்தகைய பாதிப்புக்கு காரணம்.
இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், இவ்விவரம் அறியப்பட்டவுடன் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் விமானப் போக்குவரத்து விபத்து தடுப்புக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பாதுகாப்பு தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. இந்த அறிக்கை அடுத்த 30 நாட்களுக்குள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. இதில் நடைபெற்ற தவறு கண்டறியப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.