ஷோபியான்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவு காணாமல் போன 3 காவல்துறை உயர் அதிகாரிகள், 1 காவலர் என 4 பேரில் 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
சுட்டுக் கொலை செய்யப்பட்ட காவலர்கள் நிஸார் அகமது, ஃபிர்தோஸ், குல்வந்த் சிங் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது.
காவல்துறையினரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று காஷ்மீர் மாநில காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.
ஷோபியான் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உயர் அதிகாரிகளும், 1 காவலரும் நேற்று இரவு மாயமாகினர். அவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாயமான 2 உயர் அதிகாரிகளும், 1 காவலரும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவி வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரரைக் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது கழுத்தை அறுத்திருந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இன்று காவல்துறையைச் சேர்ந்த 3 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சுட்டுக் கொன்றுள்ளனர்.
பயங்கரவாதிகளைத் தேடும் பணி ஷோபியான் மாவட்டத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.