முகப்பு
இந்தியா

கேரளம்: பேராயர் ஃபிராங்கோவின் ஜாமீன் மனு தள்ளுபடி; 2 நாட்களுக்கு போலீஸ் காவல்

கேரளத்தில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான பேராயர் ஃபிராங்கோ முலக்கலின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Updated On : 22 செப்டம்பர், 2018 at 4:00 PM
பகிர்:

கேரளத்தில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான பேராயர் ஃபிராங்கோ முலக்கலின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கேரள காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, திங்கட்கிழமை வரை கோட்டயம் போலிஸ் கிளப்பில் வைத்து பேராயர் ஃபிராங்கோவிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபை பேராயராக இருந்த ஃபிராங்கோ, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் கேரள காவல்துறையினர் கடந்த ஜூன் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

Advertisement

இதனிடையே, தனது செல்வாக்கு, பண பலத்தை பயன்படுத்தி, வழக்கிலிருந்து தப்பிக்க ஃபிராங்கோ முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய கன்னியாஸ்திரி, இதுதொடர்பாக வாடிகனுக்கான இந்தியத் தூதருக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரம் கேரளம் மட்டுமன்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் பொறுப்பில் இருந்து ஃபிராங்கோ தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் புதன், வியாழன் ஆகிய இரு தினங்களாக விசாரணை நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக விசாரணை நீடித்தது. கொச்சியிலுள்ள குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர், வெள்ளிக்கிழமை இரவு ஃபிராங்கோ கைது செய்யப்பட்டார். அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கோட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி சங்கர் தெரிவித்தார்.

போராட்டம் தொடரும்: முன்னதாக, ஃபிராங்கோவை கைது செய்ய வலியுறுத்தி, கொச்சி உயர் நீதிமன்றம் அருகே கன்னியாஸ்திரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர்கள், ஃபிராங்கோவுக்கு தக்க தண்டனை கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.