மகா கூட்டணி வெற்றிபெற்றால் மத்திய அரசின் வழிகாட்டியாக தேவே கௌடா இருப்பார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த குமாரசாமி கூறியதாவது:
மத்தியில் மகா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், எனது தந்தை தேவே கௌடா பிரதமராக மாட்டார். ஆனால், மத்திய அரசின் வழிகாட்டியாக இருப்பார். நாட்டின் நலனை பாதுகாப்பார். இந்த தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே தற்போதைய இலக்கு. பிரதமர் யார் என்பதை பின்பு முடிவு செய்து கொள்ளலாம். தற்போதைக்கு பிரதமர் வேட்பாளர் தேர்வு இரண்டாம் பட்சம் தான் என்று தெரிவித்தார்.
முன்னதாக, மாண்டியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய குமாரசாமி, வருகிற தேர்தலில் கன்னட மக்களாகிய நீங்கல் மஜத கட்சிக்கு உங்கள் ஆசியை வழங்க வேண்டும். அப்போது தான் 96-க்கு பிறகு ஒரு கன்னடர் மீண்டும் இந்நாட்டின் பிரதமராக முடியும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.