பெங்களூரு: வருமான வரித் துறையினரின் சோதனை குறித்து முன்கூட்டியே ராணுவ நடவடிக்கை என்று துப்பு கொடுத்த முதல்வர் குமாரசாமி தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் பாஜக புகார் அளித்துள்ளது.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையிலான பாஜகவினர் முதல்வர் குமாரசாமி மீது புகார் அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ராஜீவ் சந்திரசேகர் கூறியது:
அண்மையில் வருமான வரித் துறையினர் மாநில அளவில் அதிரடி சோதனை நடத்தினர். அதற்கு முந்தைய நாளே அதுகுறித்த விவரம் தனக்கு தெரியும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் குமாரசாமி பதவி ஏற்கும் போது அரசின் ரகசியத்தை காப்பதாக உறுதி அளித்துள்ளார். ஆனால், அவர் வருமான வரித் துறையின் சோதனை குறித்த ரகசியத்தை பாதுகாக்க தவறியுள்ளார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார். பேட்டியின் போது, எம்.எல்.ஏ. அஸ்வத்நாராயணா, பாஜக பிரமுகர்கள் ஆனந்த், ராகவேந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.