ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்க விடமாட்டோம் என்று இந்திய ராணுவ உயரதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து ராணுவ உயரதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் கூறியதாவது:
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டது. புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிஷ்த்வார் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எதிரிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஜம்முவில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்க விடமாட்டோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறோம். சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். கிஷ்த்வார் பகுதியில் மீண்டும் பயங்கரவாதம் உயிர்த்தெழ வாய்ப்புள்ளதால் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிஷ்த்வாரில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் ஆயுதங்களும், போதைப் பொருள்களும் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்டன. பொதுமக்களின் ஆதரவு இருப்பதால்தான் பயங்கரவாதிகளின் பல்வேறு முயற்சிகளை எங்களால் முறியடிக்க முடிகிறது.
பாக். ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்: பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் 513 முறை எல்லைப் பகுதியில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
வலிமையான ஆயுதங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிய ரக பீரங்கிகளையும் அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தி தாக்குதல் நடத்துகிறது.
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர்.
இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் நம்மைக் காட்டிலும் அவர்களுக்கே சில முறை அதிக இழப்பு ஏற்படுகிறது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கை காரணமாக, ஸ்னைப்பர் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் பிப்ரவரி 27ஆம் தேதி வரை நடத்தவில்லை என்றார் பரம்ஜித் சிங்.