பாஜகவில் மட்டும்தான் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மரியாதை தரப்படுகிறது என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்திருந்தனர். அதற்கு பதிலடி தரும் வகையிலேயே தினேஷ் சர்மா இத்தகைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து லக்னௌவில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நரசிம்ம ராவுக்கு, அவரது மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அவரது ஆன்மாவுக்கு காங்கிரஸார் யாரும் மரியாதை செலுத்தவேயில்லை. இதேபோன்றுதான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரியும் நடத்தப்பட்டார்.
இப்படிப்பட்ட கட்சியை சேர்ந்தவர்கள், மூத்த தலைவர்களை நடத்துவது எப்படி என்று எப்படி பாஜகவுக்கு தெரிவிக்க முடியும்? மூத்த தலைவர்களை ஓரம்கட்டுவது காங்கிரஸ்தான்.
ஆனால், இதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றார். மூத்த தலைவர்களுக்கு பாஜகவில் மிகப்பெரிய மரியாதை தரப்படுகிறது. வாஜ்பாயும், அத்வானியும், பாஜகவின் வழிகாட்டிகள் ஆவர்.
மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் மட்டும்தான் சமாஜவாதி போட்டியிடுகிறது. ஆனால், பிரதமராக பதவியேற்பது அல்லது பிரதமர் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பது குறித்து அக்கட்சி கனவு காண்கிறது. இது சிரிப்பைதான் தருகிறது. உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாத அக்கட்சியால், செயல்படுத்த முடியாத திட்டங்கள், அறிவிப்புகள் மூலம், நாட்டை அழிக்க மட்டும்தான் முடியும்.
தேசத்துக்கு முதல் முன்னுரிமை என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதைத்தான் பாஜக பின்பற்றி வருகிறது. இந்தியாவை பிரிப்பது குறித்து யாரேனும் கனவு கண்டால், அவர்களுக்கு நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அப்போது அவர்களின் கனவுகள், நிறைவேறாத கனவுகளாகி விடும் என்றார் தினேஷ் சர்மா.