நிலுவை ஊதியம்: குடியரசுத் தலைவருக்கு ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கடிதம்
நிதிநிலை மோசமடைந்ததால் தற்காலிகமாக சேவையை நிறுத்தி வைத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
புது தில்லி: நிதிநிலை மோசமடைந்ததால் தற்காலிகமாக சேவையை நிறுத்தி வைத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகைகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்து, அவசர உதவிக்கு நிதியுதவி அளித்து, விமான சேவை மீண்டும் செயல்பட உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
23 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் நிதிப்பற்றாக்குறையால் தவித்து வருகிறது. தனது நிறுவனத்தின் விமான ஓட்டிகள் உட்பட ஊழியர்களுக்கு ஊதியத்தையும் நிலுவையில் வைத்துள்ளது.
முழுதாக 3 மாதத்துக்கு மேல் ஊதியம் கிடைக்காமல் நிலுவையில் இருப்பதால், உடனடியாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் ஊழியர்களின் சங்கம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.