இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 35 வெளிநாட்டினர் உட்பட உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 158-ஆக அதிகரித்துள்ளது. 400-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:
தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக நிலவரம் குறித்து இலங்கை அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கை அரசுக்கும் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் அங்குள்ள இந்திய தூதரகத்தை தயவு செய்து தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களையும் அவர் அறிவித்துள்ளார். அதில், +94777903082,+94112422788,+94112422789, +94112422789 மூலம் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.