எவ்வளவு பணம் இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், ஒரு வேளை மாதம் ரூ.1 கோடி அல்லது 2 கோடி வருவாய் ஈட்டினால் நீங்கள் பணக்காரராக இருப்பதாக உணர்வீர்களா?
ஆனால், நிச்சயம் கஷ்டப்பட்டு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு உங்களால் சந்தோஷப்படவே முடியாது, நீங்கள் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்து வேதனைப்படுபவராக இருந்தால்.
உண்மையில், உங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வருவாய் இருந்தாலே நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடையலாம், ஆனால் அவ்வாறு இருக்க இந்த சமூகம் விடுவதில்லை. ஒன்று வேண்டுமானால் சொல்லலாம், நீங்கள் அடிக்கடி யார் ஒருவரை ஒப்பிட்டுப் பார்த்து வாழ்கிறீர்களோ, அவர்களை விட ஒருப்படி மேலே நீங்கள் நின்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம். சரிதானே?
சரியேதான். ஏன் என்றால், உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்விலேயே இதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாம். அதாவது, ஒருவர் தான் பணக்காரராக இருப்பதாக நினைத்து எப்போது மகிழ்ச்சி அடைகிறார் என்றால், தான் எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்கும் நபரை விட சற்று அதிக சம்பளம் வாங்கும் போதுதான் என்கிறார்கள் மனநலனை ஆராய்ச்சி செய்யும் அமைப்புகள்.
ஆனால் இது ஒரு சிறந்த வழியில்லை என்றுதான் மனநல மருத்துவர்களும், பொருளாதார நிபுணர்களும் கருதுகிறார்கள். அதாவது, ஒருவர் தனக்கு என்ன தேவை, தன்னால் எது முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டால் மட்டுமே மகிழ்ச்சியை அனுபவிக்க முடியுமே தவிர, வெளிப்புற விஷயம் ஒன்று நம் மகிழ்ச்சியை தீர்மானிப்பதாக அமையக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்கள்.
மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்தே நாம் மகிழ்ந்திருக்கும் போது சில பேராபத்துகளும் இருக்கின்றனவாம். அதாவது, அவர்களைப் போல ஆடம்பரமாக செயலவு செய்து, நமது செலவுக்கான வரம்பை மீறிவிட்டால், உங்களுக்கு ஏற்ப நீங்கள் ஒப்பிடும் நபரும் வளர்ந்து கொண்டே சென்றால், உங்களது மகிழ்ச்சிக்கான எல்லை வளர்ந்து கொண்டே செல்லுமே, பணத்தைச் சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் உங்களது மன அழுத்தத்தையும் அல்லவா கூட்டிக் கொள்வீர்கள்.
அதாவது பொருளாதார நிபுணர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள் என்றால், மற்றவரை நாம் எப்போதும் ஒப்பிடக் கூடாது. அதற்கு மாறாக, கடந்த காலத்தில் நாம் எப்படி இருந்தோம், நமது பொருளாதாரம் எப்படி இருந்தது என்பதை ஒப்பிட்டுத்தான் நமது வளர்ச்சியைக் கணக்கிட்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். தொய்விருந்தால் துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஒப்பிடுவதால் நமக்கு ஏற்படும் மன அழுத்தமும் பாதியாகக் குறையும், அதில்லாமல், நமது மகிழ்ச்சிக்கு எவ்வளவு பணம் தேவை, ஏன் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
அதாவது நமது நிதிநிலை எப்படி இருக்கிறது? எதெல்லாம் முக்கியத் தேவைகள்? என்பதை உணர்ந்து கொண்டால் நிச்சயம் ஓய்வு காலத்துக்குத் தேவையான பணத்தை நம்மால் சேமிக்க முடியும்.
ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பணம் மட்டுமே எல்லாமும் அல்ல, ஆனால் பணத்தைக் கொண்டு உங்கள் கனவுகளை மெய்ப்பித்துக் கொள்ளலாம் அவ்வளவே.