புது தில்லி: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா போன்று மற்றொரு தாக்குதலை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதியன்று துணை ராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் புல்வாமா போன்று மற்றொரு தாக்குதலை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
இதுதொடர்பாக உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த 6 முதல் 7 பயங்கரவாதிகள் எல்லைப்பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகவும், அவர்கள் காஷ்மீரில் பல தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இம்மாத தொடக்கத்தில் பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயன்றது. ஆனால் அந்த முயற்சிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.