பாஜக ஆட்சியில் பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகத் துறை முழுச் சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர் உறுதியளித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எனது தந்தை ஊடகத் துறையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியபோது, பத்திரிகை சுதந்திரத்துக்காக போராடி எனது இளவயதில் 16 மாதங்கள் சிறையில் கழித்துள்ளேன். எங்கள் ஆட்சியில், ஊடகத் துறை முழுச் சுதந்திரத்துடன் செயல்படலாம் என்று அவர் உறுதியளித்தார்.
காஷ்மீரில் அமைதி: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதி நிலவி வருவதாக ஜாவடேகர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பக்ரீத் தொழுகை மிகவும் அமைதியாக முடிவடைந்தது. காஷ்மீரின் வடக்குப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததில் பலர் உயிரிழந்ததாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன. காஷ்மீரில் வசிக்கும் சாதாரண குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது என்றார்.
சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் அநீதி: ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் சிறுபான்மையினர் மற்றும் பிற சமூகத்தினர்களுக்கு காங்கிரஸ் அநீதி இழைத்துவிட்டதாக ஜாவடேகர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ஜம்மு-காஷ்மீரில் ஹிந்துக்கள் அதிகம் வசித்திருந்தால் சிறப்பு அந்தஸ்தை பாஜக நீக்கியிருக்காது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. இத்தகைய கருத்துகளுக்கு இப்போது அர்த்தமேயில்லை. நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் சிறுபான்மையினர், கல்வி நிறுவனங்கள் நடத்த அனுமதிக்கப்படாதது ஏன் என்று காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும். காஷ்மீரில் தூய்மைப் பணியாளர்களின் உரிமை காங்கிரஸ் ஆட்சியில் மறுக்கப்பட்டு வந்தது என்று குற்றம்சாட்டினார்.