கேரளத்தில் மழை, வெள்ளச் சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளத்தில் கடந்த 8ஆம் தேதியில் இருந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இன்றைய நிலவரப்படி, மழை, வெள்ள பாதிப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளதாக மாநில அரசு வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
இன்னும் 29 பேரைக் காணவில்லை. 40 பேருக்கு காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 50 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்னும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 517 பேர் 805 முகாம்களில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை வெள்ளத்தால் 12,761 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன; 1,186 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேரள அரசு புதன்கிழமை இழப்பீடு அறிவித்தது. இந்நிலையில், கேரளத்தில் மழை குறைந்துள்ளதால், வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. தற்போது அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.