உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது.
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்ததால், மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்தது, நிலச்சரிவு, வெள்ளம் உள்பட பல்வேறு காரணங்களால் இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். வெள்ள பாதிப்புகளை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
ஆராகோட் பகுதி மக்களை நேரில் சந்தித்த ராவத், அரசிடம் இருந்து தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர், மழை தொடர்பான இடர்களால் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் உத்தரகாசி அருகே இன்று விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.