மறைந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லியின் உடல் வேத மந்திரங்கள் முழங்க அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜேட்லி, இறுதிச் சடங்குகளைச் செய்து சிதைக்கு தீ மூட்டினார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவின் போது வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் உள்ள பிரதமர் மோடி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. அரசு முறை பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என ஜேட்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதையடுத்து தொலைபேசி வாயிலாக அவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனுக்கு நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்கிழமை நாடு திரும்பினார்.
இதையடுத்து, மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் இல்லத்துக்கு காலை 11 மணியளவில் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார்.