குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மூலம் சாவர்க்கர் மற்றும் ஜின்னாவின் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்து சாவர்க்கர் மற்றும் ஜின்னாவின் கொள்கையை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. பிரிவினையின் போது இங்கு பிறந்த காரணத்தால் 34 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியக் குடியுரிமை பெற்றனர். இதன்மூலம் பிரிவினையை விரும்பிய சாவர்க்கர் மற்றும் ஜின்னாவின் கொள்கையை தான் தற்போதைய மத்திய அரசு செய்துள்ளது.
இந்த அரசுக்கு வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட மக்களின் பிரச்னைகள் தொடர்பாக அக்கறை இல்லை. ஆனால் 2024 தேர்தலை மனதில் வைத்து, இதுபோன்ற பிரச்னைகளை திட்டமிட்டு செயல்படுத்துகின்றன.
மத்திய உள்துறை அமைச்சருக்கு வரலாறும் தெரியாது, அரசியலமைப்பும் தெரியாது. அரசியலமைப்பின் 5-ஆவது பிரிவு கீழ், இந்தியாவில் பிறந்தவர் அல்லது பெற்றோர் இந்தியர் என்றால் அவர்கள் இந்தியராகவே கருதப்படுவார்கள். மதத்தின் அடிப்படையில் ஒருபோதும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.