முகப்பு
இந்தியா

மின் கட்டணம் செலுத்தாததால் காவல் நிலையங்களில் மின்சாரம் துண்டிப்பு!

மின் கட்டணம் செலுத்தாததால் லூதியானாவில் உள்ள காவல் நிலையங்களில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:31 PM
police station in Ludhiana
பகிர்:

மின் கட்டணம் செலுத்தாததால் லூதியானாவில் உள்ள காவல் நிலையங்களில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காவல் நிலையங்கள், அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் பலவற்றில் மின் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. பஞ்சாப் மாநில மின்சார வாரியம் தொடர்ந்து பலமுறை அறிவுறுத்தியும், மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. 

இதையடுத்து இன்று, லூதியானாவில் உள்ள 10 முதல் 14 காவல் நிலையங்களில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். மின்சாரம் இல்லாததால் காவல் நிலையங்கள் வெளிச்சம் இன்றி இருளான நிலையில் காணப்பட்டன. காவல் நிலைய அலுவல் வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என அம்மாநில மின் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் பகுதி மின் கட்டணத்தையாவது செலுத்தும் முயற்சியில் காவல் நிலையங்கள் இறங்கியுள்ளன. 

பஞ்சாப் மின் வாரியத்தின் தலைமை பொறியாளர் டி.பி.எஸ்.கிரெவால் இதுகுறித்து கூறுகையில், 'பஞ்சாபில் 51 அரசுத் துறைகள், ரூ.214 கோடி அளவிலான மின் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. இதில் அரசு பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளும் அடங்கும். ஆனால், அங்கு மின் இணைப்பைத் துண்டித்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்பதால் அந்த முடிவை கைவிட்டுவிட்டோம். தற்போது 14 காவல் நிலையங்களில் மட்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.