81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு, நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் முதல்வர் ரகுபர் தாஸ் ஜெம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் இருந்து போட்டியிட்டார்.
காங்கிரஸ், ஜெஎம்எம் மற்றும் ஆர்ஜேடி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஹேமந்த் சோரன் தும்கா மற்றும் பர்ஹைத் ஆகிய இரு தொகுதிகளில் இருந்து போட்டியிட்டார். மேலும் ஜெவிஎம் (பி) கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பாபுலால் மரண்டி, தான்வார் தொகுதியில் களம்கண்டார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
24 மாவட்ட தலைநகரங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிற்பகலுக்குள் உறுதியான முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெர்மோ பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கோமியா பேரவைத் தொகுதியில் ஏஜெஎஸ்யூ கட்சியைச் சேர்ந்த லம்போதர் மஹ்தோ வெற்றிபெற்றார். சந்தன்கியரி பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமர் பௌரி வெற்றிபெற்றார்.
வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் பின்வருமாறு:
பாஜக - 31, வெற்றி - 1
காங்கிரஸ் - 13, வெற்றி - 1
ஜெஎம்எம் - 23
ஆர்ஜேடி - 4
ஜெவிஎம் (பி) - 3
ஏஜெஎஸ்யு - 3, வெற்றி - 1
சிபிஐ (எம்எல்) - 1
என்சிபி - 1
சுயேட்சை - 2
இதன்மூலம் பாஜக 31 இடங்களிலும், காங்கிரஸ்-ஜெஎம்எம்-ஆர்ஜேடி கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.