முகப்பு
இந்தியா

சூரிய கிரகணம் என்பது என்ன? 

சூரிய கிரகணம் என்பது வானத்து சந்திரனின் நிழல் விளையாட்டுதான். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:41 PM
பகிர்:

சூரிய கிரகணம் என்பது வானத்து சந்திரனின் நிழல் விளையாட்டுதான். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பெளர்ணமி நாளிலும் வரும்.

வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை - டிச. 26) காலை 9 மணி முதல் மதியம் 12.29 மணி வரை நிகழ இருக்கிறது. தமிழகத்தில் காலை 8 மணி முதல் 11.15 மணிவரை நாம் இதைப் பார்க்கலாம்.

வளைய சூரியகிரகணம் தமிழகத்தில் தமிழகத்தில் உதகை, கோவை, ஈரோடு, பாலக்காடு, திருப்பூர், திருச்சி,  திண்டுக்கல், புதுக்கோட்டை,சிவகங்கை, கரூர் மற்றும் சென்னை உட்பட தென் இந்தியா முழுவதும் ஓரளவு இன்றைய சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம்.  

Advertisement

கிரகணத்தின் போது, சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தியே இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும். இந்த கிரகணம் வழக்கம் போல் இல்லாமல் 3 நேரம் தோன்றக் கூடிய நீண்ட கிரகணம் என்பதால் நேரடியாகக் காண்பதைத் தவிர்க்க வேண்டும். எனவே வெறும் கண்களில் சூரியனை காண்பது கடினமாக இருக்கும்.  இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது.  அது கண்களின் விழித்திரையை பாதித்துவிடும். மேலும் சந்திரன் சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும்.

சூரிய கிரகணம் என்பது வானில் நிகழும் இயற்கை நிகழ்வு என்பதால் இதுகுறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. சூரியனை கிரகணத்தின்போது மட்டுமல்ல, எப்போதும் நேரடியாக கூா்ந்து பாா்க்கக் கூடாது. இதனால் கண்கள் பாதிப்படையும். கிரகணத்தை சோலாா் கண்ணாடி மூலமாக பாா்ப்பதே பாதுகாப்பானது. கூலிங் கிளாஸ், கருப்பு கண்ணாடிகள் அணிந்து பாா்க்கக் கூடாது. அதேபோல், கா்ப்பிணி பெண்கள் கிரகணத்தின்போது வெளியே வரக்கூடாது, சமைத்த உணவை சாப்பிடக் கூடாது என்பது போன்றவையெல்லாம் கட்டுக்கதைகள்தான். இவற்றுக்கு அறிவியல்பூா்வமான எந்த ஆதாரமும் இல்லை.

சோலாா் கண்ணாடி அணிந்தாலும் 3 நிமிடங்கள் மட்டுமே தொடா்ந்து பாா்க்கலாம். அதன் பிறகு இடைவெளி விட்டு பாா்ப்பது நல்லது. மழை பெய்து மேகம் இருந்தால் கிரகணத்தை பாா்ப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு கன்னியாகுமரியில் 2010 இல் வளைய வடிவ சூரிய கிரகணம் தெரிந்தது. வரும் ஆண்டில் சில வட மாநிலங்களில் சூரிய கிரகணம் தெரியும். அதன் பிறகு, 2031இல் தான் இந்தியாவில் கிரகணம் தெரியும். எனவே வானில் நடைபெறும் அரிய நிகழ்வான இதை யாரும் தவற விட வேண்டாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சூரிய கிரகணத்தின்போது எந்தவொரு தீமை விளைவிக்கும் கதிர்களும் சூரியனிடமிருந்து வருவதில்லை. அவை உணவை, உயிரினங்களைப் பாதிப்பதும் இல்லை. எனவே குளிக்க வேண்டியதும் இல்லை. உணவை மூடிவைக்க வேண்டியதும் இல்லை. வீட்டை/கோவிலை கழுவ வேண்டியதும் இல்லை. கிரகணத்துக்கு முன்னும் பின்னும் குளிக்க வேண்டியது இல்லை. கடலில் குளிக்க வேண்டியதோ, சாங்கியமாக நல்ல தண்ணீரில் உப்பைப் போட்டு குளிக்க வேண்டியதில்லை. அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். போலி அறிவியலுக்குள்  மூழ்கிவிடக்கூடாது. தாரளமாய் நீங்கள் கிரகணத்தின் போது சாப்பிடலாம். எந்த  பிரச்சினையும் ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments